Friday, November 4, 2011

திக்கவயல் தர்மகுலசிங்கம்

திக்கவயல் தர்மகுலசிஙகம்
சுவைத்திரள் பத்திரிகையின் ஆசிரியரும், முதுபெரும் எழுத்தளருமான திக்கவயல் தர்மகுலசிங்கத்தின் மறைவு பற்றி அறிவோம்.

இன்று அவரது மனைவியுடன் பேசக் கிடைத்தபோது துயர் பெருக்கியது.

"வீட்டிலை நானும் அவரும்தான். எதோ எழுதிக் கொண்டிருந்தார். திடீரென 'இங்கை ஓடி வாரும்' என என்னைக் கூப்பிட்டார். நெஞ்சிற்குள் ஏதோ செய்கிறது என்றார். தலையணையை எடுத்து அவரைது தலையை உயர்த்தி அணைத்துப் பிடித்தபோது வாந்தி வந்தது. அவ்வளவுதான். சாய்ந்து விட்டார்"

"டொக்டர் வந்து பார்த்தபோது தூக்கிய கை வழுகி வீழ்ந்துவிட்டது." என்றார். டொக்டர் அருகில்தான் இருக்கிறாராம். தாமதமின்றி உடனடியாகவே வந்துவிட்டதாகக் கூறினார். 
எவ்வளவு துயரம் அந்த அம்மையாருக்கு. நோய்நெடி எனப் படுத்ததில்லையாம். கொலஸ்டரோல், பிரஸர் ஒன்றும் கிடையாதாம். டொக்ரட்டையே போகாத மனுசன் இப்படி திடீரெனப் போய்விட்டார் என அழுதார்.

இலக்கியத்தையும், இலக்கிய நண்பர்களையும் எந்நேரமும் நினைவு கூரும் அவரது இழப்பு அளப்பரியது என்பதில் சந்தேகம் இல்லை.
 ஊர்விட்டுப் பிரிந்தபோதும், மரணத்திற்கு ஓரிரு நாட்களுக்கு முன்புவரை தொடர்பில் இருந்த ஆழ்ந்த நட்புடையோன்.

ஓரு தடவை சிரித்திரன் டொக்டரின் டயறி தொடருக்கு நான் கொடுக்க வேண்டிய கட்டுரை தாமதாமாகிவிட, வீடு தேடி வந்து, நான் கட்டுரை எழுதி முடிக்கும் வரை காத்திருந்து வாங்கிச் சென்ற கடமையுணர்வை மறக்க முடியாது.

சிரித்திரனிலும், சுந்தரிலும் அளப்பரிய பற்றும் நன்றியுணர்வும் கொண்டவர். சிரித்திரனில் எழுதிய எழுத்தாளர்களைப் பற்றியும், அவர்களது படைப்புகள் பற்றியும் தான் எழுதி வரும் நூலுக்காகத்தான் மறைந்த அன்று கூடஎழுதிக் கொண்டிருந்தார். முதல் நாளும் ஒரு பகுதியை அச்சகத்திற்குக் கொடுத்துவிட்டு வந்ததாகத் துணைவியார் கூறினார்.
அவருக்கு எனது அஞ்சலிகள்.
நவம்பர் 2, 2011 இறைவனடி சேர்ந்தபோது அவருக்கு வயது 64 ஆகும். அவரது இறுதிக் கிரியைகள் மட்டக்களப்பு கள்ளியங்காடு இந்து மயானத்தில் நடைபெற்றது. இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டதாகவும், பேராசிரியர் செ.யோகராசா மற்றும் ஊடகவியலாளர் ரீ.எல்.ஜவ்பர்கான் போன்ற பலரும் இரங்கலுரை ஆற்றியதாக தமிழ்மிரர் செய்தி வெளியிட்டிருந்தது.
அவர் எழுதிய நூல்களாக கானாபிரபா குறிபிட்டுள்ளவை
  1. தத்துவப்படகு 1985 
  2. வரலாற்றில் தமிழும், தமிழரும் 1999 
  3. சிந்தனைப் போராளி சிவஞானசுந்தரம் 2003 
  4. திருவள்ளுவர் திடுக்கிடுவார் 2004 
  5. மட்டக்களப்பில் கண்ணதாசன் 2003 
  6. தமிழன் நினைவு கவிதைத் தொகுதி 2002 
  7. சிந்தனையைக் கிளறிய சிரித்திரன் மகுடி 2004 
  8. நாட்டுக் கருடன் பதில்கள் 2005
தொடுப்புகள்:- 
முன்பு நான் சுவைத்திரள் பற்றி எழுதிய கட்டுரை சுவைத்திரள் 
மடத்துவாசல் பிள்ளையாரடியில் கானா பிரபா எழுதிய மறைவு அஞ்சலி கட்டுரைக்குத் தொடுப்பு  
படைப்பாளி திக்கவயல் சி.தர்மகுலசிங்கம் - அஞ்சலிப்பகிர்வு
விக்கிபீடியாவில் அவர் பற்றி  சி. தர்மகுலசிங்கம் 
0.0.0.0.0.0

Post Comment

1 comments:

கானா பிரபா said...

அன்னாருக்கு இங்கேயும் என் அஞ்சலியைப் பகிர்கின்றேன், அவரது நூற்பட்டியலை விக்கிப்பீடியா துணை கொண்டு கொடுத்திருந்தேன். அவர் எழுதிப் பாதியில் இருக்கும் நூலை விநியோகம் செய்வதில் நம்மாலான உதவியை வழங்கக் காத்திருக்கின்றேன்.

Post a Comment

உங்கள் எண்ணங்கள், விமர்சனங்கள் என்னைச் சிந்திக்கத் தூண்டும்.